ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் வாரம்

ஜுலை 17, 2024 புதன்

முதல் வாசகம் : இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 10: 5-7,13-16

ஆண்டவர் கூறியது: அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது; தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது. இறைப் பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்; எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்; அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன். அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு; மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்; பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான். ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: “என் கை வலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்; என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மை யாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்; அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்; அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன். குருவிக் கூட்டைக் கண்டு பிடிப்பதுபோல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது; புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையும் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.” வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்பு மிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக் கைத் தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ? ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள்மேல் அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்; அவர் நெருப்பு மூட்டுவார்; அது கொழுந்துவிட்டு எரியும்.

ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் : திபா 94: 5-6. 7-8. 9-10. 14-15
பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.

5 ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்;
உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.
6 கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்;
திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர்.

பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.

7 `ஆண்டவர் இதைக் கண்டுகொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை’ என்கின்றனர்.
8 மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்;
மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்?

பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.

9 செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?
10 மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ?

பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.

14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.
15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர்.

பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம் : +மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

அக்காலத்தில் இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் வாரம்

ஜுலை 18, 2024 வியாழன்

முதல் வாசகம் : இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9,12,16-19

நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன. என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக்கொள்வர். ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே. ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம். பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை. இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச் செய்கின்றீர்.

ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் : திபா 102: 12-14. 15-17. 18, 20,19
பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.

12 ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்;
உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.
13 நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்;
இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.
14 அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்;
அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர்.

பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;
பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்;
அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்;
அவர்களின் மன்றாட்டை அவமதியார்.

பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்;
படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;
சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்;
அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.

பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம் : +மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.